Saturday, 20 August 2016

"சரித்திரம் படைத்த தமிழ் சினிமா" - 9"

இன்று 1945 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களைப் பற்றிக் காண்போம்.

என் மகன்,கண்ணம்மா என் காதலி, சாலிவாகனன், சௌ சௌ, கலிகால மைனர், பள்ளி நாடகம், சூரப்புலி, பக்த காளத்தி, பர்மா ராணி, பரஞ்சோதி , மஹா மாயா, மானசம்ரட்சணம், மீரா, ஸ்ரீவள்ளி ஆகியவை. இவற்றில் "மீரா", "ஸ்ரீ வள்ளி" ஆகிய இரண்டு படங்களும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களாகும்.

மீரா:
பால மீரா (குழந்தை ராதா) வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புண்ணிய தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி (செருக்களத்தூர் சாமா) வருகிறார். அவர் கொண்டுவந்த கிருஷ்ணர் சிலை குழந்தையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது. பால மீரா நந்தபாலனையே தனது மணாளனாக நினைத்து மாலையிடுகிறாள்.

மீரா (எம். எஸ். சுப்புலக்ஷ்மி) யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டனாரின் விருப்பத்திற்கு இணங்கி மேவார் ராணாவை (சித்தூர் வி. நாகையா) மணந்து சித்தூர் செல்கிறாள். சித்தூர் அரண்மனையின் அழகிய உத்தியான வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம் குழலூதிய நீலநிறத்துப் பாலகனை எண்ணி எண்ணி உருகுகிறது.

ஆரம்பத்தில் மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும் அவள் பாடிய கீதங்களையும் குறித்துப் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக, அவனுக்குச் சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் (கே. ஆர். செல்வம்) சகோதரன் விக்ரமனும் (டி. எஸ். பாலையா) மீராவைக் குறித்து அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். விஜயதசமியன்று நடந்த தர்பாருக்கு மீரா வருவதாக வாக்களிக்கிறாள். ஆனால் தர்பாருக்குப் புறப்படும் போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கச் சபா மண்டபத்திற்குப் போவதற்குப் பதிலாகக் கோயிலுக்குப் போகிறாள். ராணா கோபங்கொண்டு மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்குச் செல்கிறான்.

விக்கிரமனுடைய தூண்டுதலின் பேரில் உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டுப் பிறகு வருந்துகிறாள். பாம்பின் தலைமீது நடனமாடிய இறைவனின் அருளால் மீராவுக்குத் தீங்கு நிகழாததைக் காண்கிறாள். உதாவின் மனம் மாறுகிறது.

டில்லி பாதுஷாவின் சபையில் இருந்த தான்சேன், மான்சிங் என்ற இருவர் மீராவின் பாடல்களைக் கேட்க ஆவல் கொண்டு மாறு வேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய்ம்மறந்து இருந்தபிறகு அவரகள் பாதுஷா அளித்த முத்துமாலையை மீராவிடம் தந்துவிட்டுக் கிளம்புகிறார்கள்.

காட்டிலிருந்து ராணா திரும்பி வந்ததும் விக்கிரமனும் தளபதி ஜயமல்லும் (எம். ஜி. ராமச்சந்திரன்) முத்துமாலையைக் காட்டி ராணாவுக்குத் தூபம் போடுகிறார்கள். "அது இனிமேல் கோயில் அல்ல. பீரங்கி வைத்து இடித்துத் தள்ளுங்கள்", என்று ராணா உத்தரவு இடுகிறான்.

ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணா தான் என்று தெரிந்ததும் மீரா, அரண்மனை வாழ்வும் அரசபோகமும் தனக்கு உகந்தவை அல்ல என்று தீர்மானித்து தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டுப் பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து ரூபகோஸ்வாமியுடன் துவாரகாபுரிக்குப் போகிறாள். வெகுகாலமாக மூடிக்கிடந்த துவாரகா நாதனின் சந்நிதிக் கதவைத் திறந்து தரிசனம் அருள வேண்டுமென்று கதறுகிறாள். ஆலயக்கதவு திறக்கிறது. அடியாள் மீரா பரந்தாமனுடன் ஐக்கியமாகின்றாள்.

இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன், கல்கி கிருஷ்ணமூர்த்தி (காற்றினிலே வரும் கீதம்) ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். இன்றளவும் இப்படத்தின் பாடல்கள் பலராலும் விரும்பப்படுவையாக உள்ளன. இசை - திரு எஸ் வி வெங்கட்ராமன்.

நந்தபாலா என் மணாளா
காற்றினிலே வரும் கீதம்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே
கிரிதர கோபாலா
லீலைகள் செய்வானே
ஹே ஹரே தயாளா
மறவேனே என் நாளிலுமே
சராசரம் உன்னை யாரும் தேடுமே
அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ

2. ஸ்ரீவள்ளி:

A V மெய்யப்பன், A T கிருஷ்ணசாமி இணைந்து இயக்கிய படம். திரைக்கதை - A T கிருஷ்ணசாமி. தயாரிப்பு - A V மெய்யப்பன், இசை - T M ராஜகோபால் ஷர்மா - R சுதர்சன் ஆகியோர்.

இப்படத்தை எம் கே தியாகராஜ பாகவதரை வைத்து தயாரிப்பதாக இருந்தது.  வேறு சில காரணங்களினால் பிரச்சினைகளினால் அவரால் நடிக்க இயலவில்லை. கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வசுந்தராதேவி (வைஜெயந்திமாலாவின் தாயார்) மெய்யப்பன் தெரிவு செய்யும் கதாநாயகர்களை நிராகரித்து வந்தார். அதனால் மெய்யப்பன் அவர்கள் முற்றிலும் புதுமுகங்களை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்து, டி ஆர் மாகலிங்கம், குமாரி ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயார்) ஆகிய இருவரையும் வைத்து படத்தைத் தயாரித்தார். எஸ் ஜி கிட்டப்பாவைப் போன்று பாடும் டி ஆர் மகாலிங்கத்தின் குரல் அனைவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. கதாநாயகிக்கு  குமாரி ருக்மணியே பாடி நடித்தார்.

ஆனால் டி ஆர் மகாலிங்கத்தின் குரலின் முன் ருக்மணியின் குரல் சற்று சோடை போனது போல் ரசிகர்கள் கருதியதால், மெய்யப்பன், உடனே டி ஏ பெரியநாயகி அவர்களை அனைத்துப் பாடல்களையும் மறு ஒலிப்பதிவு செய்தார். தமிழ்நாட்டில் படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளிருந்தும் படச்சுருளை வரவழைத்து, அசுரகதியில் ஒலிப்பதிவு செய்து படத்துடன் இணைத்து, ரயில், கார் இவற்றின் மூலம் திருப்பி அனுப்பினார். இதற்கு ஏக வரவேற்பு இருந்தது.

இந்தப் படம் டி ஆர் மகாலிங்கம், ருக்மிணி, ஆகியோருக்கு பெரிய பேரை பெற்றுத் தந்தது. AVM நிறுவனத்திற்கும் புருத்த லாபம் ஈட்டித் தந்தது.

அடுத்த பகுதியில் 1946 ஆம் வருடம் வெளிவந்த சில படங்களைப் பார்ப்போம். நன்றி! வணக்கம்.
(புகைப்படங்கள் :COURTESY - THE HINDU & RANDORGUY)

No comments:

Post a Comment